Search This Blog

Wednesday 13 February 2008

தேவனே நான் உமது அண்டையில்

பல்லவி
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

அனுபல்லவி
மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் --- தேவனே

சரணங்கள்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! --- தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத்தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் --- தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் --- தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் --- தேவனே



பாடல் பிறந்த கதை:

தென் தமிழக பாரம்பரிய சபைகளில் மிகவும் பிரபலமாக விளாங்கும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். உண்மையாகப் பாடலின் பொருளை உணர்ந்து பாடும் பக்தர் எவரும் இப்பாடலை படிக்கும்போதே தேவ பிரசன்னத்தை அனுபவிக்கலாம். அனேகர் இந்தப்பாடலை இய்ற்றியது வேத நாயகம் சாஸ்திரியார் என்று நினைக்கின்றனர். இப்பாடலை இயற்றியவர் சந்தியாகு ஐயர் (புராட்டஸ்டாண்டு சபைகளில் போதகரை ஐயர் என்றுதான் அழைப்பர்) ஆவார். இவர் மதுரை ஜில்லாவில் போதக ஊழியம் செய்துவந்தார்.

பெரும்பாலும் அக்காலத்தில் ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கத்தையே பாமாலைகளாகப் பாடினர். இன்றுக் கூட தென் இந்திய திருச்சபைகளில் அவ்வாறுதான் பாடுகின்றனர். ஆங்கிலப்பாடல்களை அப்படியே தமிழில் பாடுவது புதிதாக கேட்பவர்க்கு அன்னியமானதாக இருந்தது. என்னதான் அவற்றின் இராகம் இனிமையானதாக இருந்தாலும் வார்த்தைகளை இழுத்து இழுத்து பாடுவது தமிழ் இசை அறிந்தவர்களுக்கு அவ்வாறு பாடுவதை விட நல்ல தமிழிசையில் பாடினால் நலமாயிருக்கும் என்ற எண்ணம் அப்போதிருந்தே இருந்துவந்தது. ஒரு சிலர் ஆங்கிலப்பாடல்களை பொருள் மாறாது தமிழ் யாப்பிலக்கணத்தின் படி தமிழ் இசையில் இசைத்து தந்தனர். அவர்களில் சந்தியாகு ஐயரும் ஒருவர்.

இப்பாடல் உம்மண்டை தேவனே நான் சேர்வதே என்ற பாடலினை தழுவி இயற்றப்பட்டது ஆகும். இப்பாடலின் மூல பாடல் உம்மண்டை தேவனே யாக்கோபின் வாழ்க்கையை பக்தனின் வாழ்க்கையுடன் இணைத்து பாடும் ஒரு அழகான பாடல் ஆகும்.

No comments:

Post a Comment